Categories: GOVT/POLITICS

மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தி கட்டாய பயிற்றுமொழியா? அன்புமணி இராமதாஸ் கண்டனம்

மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தியை கட்டாய பயிற்றுமொழியாக்க நினைப்பது நேருவின் வாக்குறுதியை மீறும் செயல் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனம், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய அரசு உயர்கல்வி நிலையங்களிலும், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசு பள்ளிகளிலும் இந்தியை கட்டாய பயிற்று மொழியாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருக்கிறது. பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழும் இந்தியாவில் ஒற்றை மொழியை மட்டும் திணிக்க முயல்வது அதிர்ச்சியளிக்கிறது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 11-ஆவது தொகுப்பில் இந்த பரிந்துரை இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கட்டாய மொழியாக்க வேண்டும், அதாவது மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் இந்தியில் மட்டும் தான் நடத்தப்பட வேண்டும்; இந்தியில் பணி செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் இந்தியாவை இந்தி நாடாக மாற்றுவதற்கான முயற்சியாகவே தோன்றுகிறது. இது சரியல்ல.

இந்தியா தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்தியா தான் பல்வேறு பண்பாடுகள், மொழிகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தும் ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக திகழும் நாடு. இந்த சிறப்புகள் அனைத்துக்கும் காரணம் இந்திய மக்கள் அனைவரும் வழங்கப்பட்டிருக்கும் மொழி மற்றும் கலாச்சார சுதந்திரம் தான். அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இந்த சுதந்திரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு விடும். இந்தியாவின் பெருமைகளாக கருதப்படும் ஒருமைப்பாடு, மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை ஆகியவை பாதிக்கப்படக்கூடும்.

இந்திய மக்களில் 43.60 விழுக்காட்டினர் மட்டுமே இந்தி பேசுபவர்கள். மீதமுள்ள 56.40 விழுக்காட்டினர் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை பேசுபவர்கள் தான். மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களும், பள்ளிகளும் இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களிலும் உள்ளன. இந்தியாவில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் மொழியாக ஆங்கிலம் இருப்பதால் தான் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ளது. அதை மாற்றி, இந்தியை கட்டாய பயிற்று மொழியாக மாற்றினால், இந்தி பேசாத மாணவர்களால் பாடங்களை படிக்கவோ, புரிந்து கொள்ளவோ முடியாது. ஆங்கிலத்தை விருப்ப பாட மொழியாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தாலும் கூட, ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் அதற்காக தனி கட்டமைப்பை உருவாக்க வேண்டியிருக்கும் என்பதால் அது நடைமுறை சாத்தியம் அல்ல. மேலும், கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களிலும் பெரும்பான்மையினர் இந்தி பேசாதவர்கள் தான். அவர்களாலும் இந்தியில் பயிற்றுவிக்க முடியாது என்பதால் மத்திய கல்வி நிறுவனங்களில் பெரும் குழப்பம் தான் ஏற்படும். இன்று மட்டுமின்றி என்றுமே இது தேவையில்லை.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இந்தி தான் பயிற்றுமொழியாக்கப்பட வேண்டும்; தேர்வுகளில் இந்தியை கட்டாயமாக்க வேண்டும் எனபன போன்றவை தேவையற்றவை. பல மொழிகள் பேசும் நாட்டில் பயிற்று மொழிகளும், தேர்வு மொழிகளும் பரவலாக்கப்பட வேண்டுமே தவிர, குறுக்கப்படக் கூடாது. நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை இந்தியாவை முன்னேற்றுவதற்கு பதிலாக பின்னோக்கி இழுத்துச் சென்று விடும். ஆதலால், இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஒருபோதும் ஏற்கக் கூடாது.

இந்தி பேசாத தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சி நாடு விடுதலை அடைந்த காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு எழுந்த எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் 1959-ஆம் ஆண்டு நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அப்போதைய பிரதமர் நேரு, “இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாகத் தொடரும்” என உறுதியளித்தார். 1968-ஆம் ஆண்டின் இந்திய அலுவல் மொழிகள் சட்டத் திருத்தத்திலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1976&-ஆம் ஆண்டின் அலுவல் மொழி விதி 11(2)-ன்படியும் மத்திய அரசு பணிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியை பயன்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் மதிக்காமல் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இந்தியை கட்டாய பயிற்று மொழியாக மாற்ற முயல்வது இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் அளித்த வாக்குறுதியையும், அலுவல் மொழிச் சட்ட விதிகளையும் அப்பட்டமாக மீறும் செயல் ஆகும்.

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எந்த வகையிலும் பாதிப்பு நேர மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. இந்தியாவின் அனைத்து மொழிகளும் சம அளவில் மதிக்கப்பட வேண்டும். அதை உறுதி செய்வதற்காக அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு அளித்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்தியாவின் எட்டாவது அட்டவணையில் உள்ளிட்ட தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவிப்பதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

DISCLAIMER: Some news articles and content published on this website are translated, rewritten, or generated with the assistance of Artificial Intelligence (AI) tools. While every effort is made to ensure accuracy and quality, occasional grammatical errors, typographical mistakes, translation inaccuracies, or other unintended issues may occur. Such errors are purely unintentional, and the website administration shall not be held responsible for them. Readers are kindly requested to disregard any such mistakes if noticed. We sincerely thank our readers for their continued support and encourage everyone to share our news and updates with others.
udhayatoday

Recent Posts

சென்னை ஒன் செயலியில் ரூ.1 டிக்கெட் ஆஃபர்; பேருந்து, மெட்ரோ, ரயிலில் பயணிக்கலாம்

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…

2 hours ago

கணவர் கொடுத்த பொய் புகாரால் மனைவியின் செல்போன் எண் முடக்கம்

குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…

2 weeks ago

தாட்கோ மூலம் மேக்கப் மற்றும் ஹேர் டிரஸ்ஸிங் பயிற்சி:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…

2 weeks ago

தாட்கோ மூலம் CAD, CAM மற்றும் Industrial Automation பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…

2 weeks ago

“ஏஐ நம்மைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது” – கங்கை அமரன் வேதனை

சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…

3 weeks ago

சித்தராமையா ராஜினாமா: “வாக்கை காப்பாற்றிவிட்டேன்” என விளக்கம்

கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…

3 weeks ago