‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்துக்கு தனியார் பள்ளி சங்கங்கள் தங்களது பங்களிப்பை தருவதாக கூறியதை திரித்து, அரசுப் பள்ளிகளை தத்துக்கொடுத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டன அறிக்கை விடுவதை வன்மையாக கண்டிப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து அன்பில் மகேஸ் அளித்த பேட்டியில், “தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த என்ன திட்டங்களை கொண்டு வரலாம், பள்ளிக் கல்வி த்துறை மறுகட்டுமானத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை செய்யலாம், என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில் பேசப்பட்டது என்ன என்பது ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினருக்கு தெரிந்திருக்கும். ஒரு செய்தி வெளியாகிறது என்றால் அது நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். ஏன் எனில் பத்திரிகையில் வரும் செய்திகளைதான் உண்மை என மக்கள் பலர் நம்புகின்றனர். எனவே வரும் செய்திகள் உண்மையானதா இல்லையா என்பதை செய்தியாளர்கள் முதலில் பார்க்க வேண்டும்.
ஒரு செய்தி வந்தால், அதை முதலில் சரிபார்க்க வேண்டும். நான் அப்படி பேசினேனா? நான் பங்கேற்ற விழாவில் அந்த மாதிரியான கோரிக்கை ஏதாவது வந்திருக்கிறதா? அந்த கோரிக்கையில் தத்தெடுப்பது, தாரைவார்ப்பது போன்ற தகவல் வந்ததா என்பதையெல்லாம் முழுமையாக படித்துவிட்டுத்தான் அவை செய்தியாக வெளியிடவேண்டும். தத்தெடுக்கிறார்கள், தாரை வார்க்கிறார்கள் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தவுடன் எதிர்க்கட்சிகள் உண்மையை உணராமல் இத்திட்டத்திற்கு வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறுகின்றனர்.
இதனால், பள்ளிக் கல்வித்துறை சார்ந்தவர்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே, முழுமையாக ஒரு தகவலை தெரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிப்பவர்களை, பள்ளிக் கல்வித் துறை சார்பில் வன்மையாக கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 5 லட்சம் ரூபாய் கொடுத்து ஆரம்பித்து வைத்த ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் சிஎஸ்ஆர் மூலம் இதுவரை 504 கோடி ரூபாய் வந்துள்ளது. அதில் ரூ.350 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த திட்டத்துக்கு தனியார் பள்ளி சங்கத்தினர் தங்களது பங்களிப்பினை தருவதாக கூறினார்கள். அதற்கு நான் நன்றிதான் தெரிவித்தேன். ஆனால், அதை தாரைவார்த்துவிட்டோம், தத்துகொடுத்துவிட்டோம் என்று விமர்சனங்கள் எழுகின்றன. இது தொடர்பாக தனியார் பள்ளி சங்கத்தினர் தங்களது விளக்கத்தையும் கொடுத்துவிட்டனர். அது ஊடகம் மற்றும் பத்திரிகைகளிலும் வந்தது.
எஸ்எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு நிதி வந்தபோது, நமது கொள்கையை விட்டுக்கொடுத்து அந்த பணத்தை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றவர் முதலமைச்சர் அவர்கள். இன்றளவும் அதற்கான ரூ.500 கோடிக்கான சம்பளத்தை மாநில அரசுதான் வழங்கிக் கொண்டிருக்கிறது. அதில் ஏறத்தாழ 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் அடங்கியுள்ளனர். எவ்வளவு நிதிச்சுமை வந்தாலும், தமிழக மாணவர்களின் கல்வி எக்காரணம் கொண்டு தடைபட்டு விடக்கூடாது என்று கூறுபவர் தமிழக முதல்வர்.
கல்வித் துறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது எங்களை ஊக்கப்படுத்த வேண்டும். உங்களுக்கு ஏதாவது ஐயம் இருப்பின் எங்களிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள். விளக்கம் திருப்தி அளிக்காவிட்டால், கண்டனம் தெரிவியுங்கள். விளக்கமும் கேட்காமல், நடந்தது என்னவென்றும் தெரியாமல் எதற்காக இத்தனை அவசரமாக கண்டன அறிக்கைகள் விடுகிறீர்கள் என்றுதான் எனக்கும் புரியவில்லை என அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
நீங்கள் நினைப்பது போல அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பதோ, தாரைவார்க்க வேண்டிய அவசியமோ தமிழக அரசுக்கு இல்லை. பள்ளிக் கல்வித் துறை என்பது எங்களுடைய பிள்ளை. எங்கள் பிள்ளையை நாங்கள்தான் வளர்ப்போமே தவிர, தத்துக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…