செப்.10 நீட் தேர்வு முடிவுகள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகைமை அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் கிடைக்கிறது. நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை 18 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதினர்.
தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வை மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி உள்ளனர். நீட் தேர்வு முடிவு தாமதத்தால் பொறியியல், மருத்துவ உயர் படிப்பு சேர்க்கை தள்ளிப்போகிறது. கடந்த மாதம் தொடங்க வேண்டிய பொறியியல் கவுன்சிலிங் நீட் தேர்வு முடிவினால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை (10-ம் தேதி) நீட் தேர்வு முடிவு வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி நாளை காலை 10 மணியளவில் நீட் தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவினை பார்க்கலாம். மாணவர்களின் பெயர், பாடவாரியாக பெற்ற மொத்த மதிப்பெண் மற்றும் அதன் சதவீதம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் அதிகாரப்பூர்வமாக முடிவு வர இருப்பதால் மாணவர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே அந்த வாய்ப்பை பெற முடியும். 500-க்கு மேல் மதிப்பெண் பெறுபவர்கள் ஏதாவது ஒரு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது. முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடை பெறும்.
