Uncategorized

மரக்கன்றுகளை வழங்கிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

by udhayatoday  •  October 10, 2022

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை இணைந்து நடத்தும் பசுமை திருவிழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை சார்பாக, பசுமை திருவிழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் பசுமையான தமிழகத்தினை உருவாக்கிட வேண்டும் என்ற அடிப்படையில், “பசுமை தமிழ்நாடு” இயக்கத்தினை துவக்கி வைத்துள்ளார்கள். அதனடிப்படையில், நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு, அதனை முறையாக பராமரிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்குள் 50 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என, திட்டமிடப்பட்டு, பொதுமக்கள் பங்களிப்புடன் அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை தானாக முன்வந்து, அரசுடன் இணைந்து, சிவகங்கை பசுமை திருவிழா என்று பெயரிட்டு, 09.10.2022 முதல் 14.10.2022 வரை ஒருவாரகாலத்தில் 50,000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு, அதன் தொடக்கமாக, கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் 2,000 மரக்கன்றுகளை பள்ளிகள், கல்லூரிகளை சார்ந்த மாணாக்கர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டது.

- Advertisement -Advertise

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் மரக்கன்றுகளை முறையாகப் பராமரித்திடவும், அதேபோன்று பொதுமக்களும் தங்களுக்கு வழங்கப்படும் மரக்கன்றுகளை வீடுகளில் நல்லமுறையில் பராமரித்து, பசுமையான மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தை உருவாக்கிட வேண்டும். மேலும், மரக்கன்றுகள் வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அரசுடன் இணைந்து பசுமையாக தமிழகத்தினை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டுமென, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.