இந்தியாவின் முதல் புல்லட் ரயில் மாதிரி வடிவம்

இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டமான மும்பை – அகமதாபாத் ரயில் பாதையின் அதிகாரப்பூர்வ மாதிரி வடிவமைப்பை ஒன்றிய ரயில்வே அமைச்சகம் டெல்லியில் வெளியிட்டுள்ளது. விமானத்தை ஒத்த நவீன தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில், சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயில், இந்திய ரயில்வே துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 508 கிலோமீட்டர் நீளமுடைய இந்த அதிவேக ரயில் பாதை மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தாத்ரா-நகர் ஹவேலி பகுதிகளை இணைக்கிறது. மும்பை, தானே, விரார், போய்சர், வாபி, பிலிமோரா, சூரத், பரூச், வடோதரா, ஆனந்த், அகமதாபாத் மற்றும் சபர்மதி உள்ளிட்ட மொத்தம் 12 ரயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகின்றன.
இந்த திட்டத்திற்காக தேவையான 1389.5 ஹெக்டேர் நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக குஜராத்தில் அமைக்கப்படும் 8 ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், கன்சோலி – ஷில்பாட்டா இடையே கடலுக்கடியில் அமைக்கப்படும் 4.8 கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதை பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதனுடன், 17 நதிப் பாலங்களின் கட்டுமான பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் ஷின்கன்சென் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த புல்லட் ரயில், மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் மும்பை – அகமதாபாத் இடையிலான பயண நேரம் தற்போது உள்ளதை விட பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
