தன்னுடைய குடும்பத்தாருடன் தீபாவளி கொண்டாட முடியாத அளவுக்கு பணியில் சுமைகள் இருந்தாலும், அவற்றை பொருட்படுத்தாது முதியோர் இல்லத்தில் தீபாவளியை கொண்டாடி தன்னால் முடிந்த உதவிகளை ஆதரவற்ற முதியோர்களுக்கு வழங்கியுள்ளார் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர்.
திண்டுக்கல் மாவட்டம் , அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில், ஏராளமான முதியோர்கள் உள்ளனர். தீபாவளி அன்று, கருணை இல்லத்தில் இருக்கும் முதியோர்களை, அம்மைய நாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி சென்று பார்த்து அன்பாகவும் ஆதரவாகவும் பேசினார். மேலும், அங்கிருந்த அனைவருக்கும் உணவு அளித்து அவர்கள் அனைவருடனும் தீபாவளி வாழ்த்து பகிர்ந்து கொண்டார். சொந்த பந்தங்களை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் முதியோர்களுடன் தீபாவளி கொண்டாடிய ஆய்வாளர் சண்முக லட்சுமியை அனைவரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.