ஈசேவை மையம் தொடங்க சிறப்பு பயிற்சி: EDII-TN ஏற்பாடு

சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai Centre) தொடங்க விரும்பும் தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்களுக்கு எளிதில் வழங்கும் முக்கிய தளமாக ஈசேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை ஒரு சிறந்த தொழில் வாய்ப்பாக மாற்றிக் கொள்ள விரும்புவோருக்காக இந்த பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயிற்சியின் போது ஈசேவை மையம் தொடங்குவதற்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் நடைமுறைகள், மையத்தை நிர்வகிக்கும் விதம், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

இந்த பயிற்சி வகுப்பை வழிநடத்திய திருமதி பாக்கியலட்சுமி, ஈசேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை மாணவர்களுக்கு மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கினார். குறிப்பாக வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சமூகச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசுச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது, அவற்றை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது, ஆவணங்களை சரிபார்ப்பது போன்ற நடைமுறை சார்ந்த விஷயங்களை நேரடி விளக்கங்களுடன் எடுத்துரைத்தார்.

மேலும், வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு கனிவாகவும் பொறுப்புடனும் அணுக வேண்டும், சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்தும் அவர் விரிவாக விளக்கினார். பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களுக்கு எழுந்த சந்தேகங்களை தயக்கமின்றி கேட்டு தெளிவு பெற்றனர். இதனால் பயிற்சி வகுப்பு கலந்துரையாடல் முறையில் பயனுள்ள வகையில் நடைபெற்றது.

நிகழ்வில் பங்கேற்ற பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சுப்பிரமணி, தொழில் தொடங்க விரும்புவோருக்கான வங்கிக் கடன் பெறும் நடைமுறைகள் குறித்து விளக்கினார். தொழில் கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி, வங்கிகளை அணுகும் முறை, தேவையான ஆவணங்கள், தொழில் திட்ட அறிக்கை தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மாணவர்களுக்கு எளிய முறையில் எடுத்துக்கூறினார். அவரது உரை தொழில் முனைவோராக உருவாக விரும்பும் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

பயிற்சியின் நிறைவில் பங்கேற்பாளர்களிடம் இருந்து கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் பெறப்பட்டன. பலரும் இந்த பயிற்சி தங்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தியதுடன், எதிர்காலத்தில் சுயதொழில் தொடங்கும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர். பயிற்சி ஏற்பாட்டாளர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களை உதவி இயக்குநர் திரு. பிரேம்குமார் வழங்கினார். ஒளிப்பதிவாளர் பென்னி மற்றும் உதவியாளர் முத்துக்குமார், மாணவர்களின் கருத்துக்களை ஒளிப்பதிவு செய்ததுடன், மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செம்மையாக செய்தனர். மேலும், பயிற்சியின் இரு நாட்களிலும் பங்கேற்பாளர்களுக்கு தரமான உணவு மற்றும் தேநீர் வழங்கப்பட்டு சிறப்பான உபசரிப்பு செய்யப்பட்டதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மொத்தத்தில், ஈசேவை மையம் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு இந்த பயிற்சி ஒரு பயனுள்ள வழிகாட்டியாக அமைந்தது.
இந்த பயிற்சி வகுப்பில் mychengai.com மற்றும் udhayatoday.com இணையதளங்களின் செய்தி ஆசிரியர் திரு. ஆர். உதயபாஸ்கர் கலந்து கொண்டு சான்றிதழ பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
