திருவள்ளூர் அருகே இறந்தவர் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும் நிதியை வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கரிலம்பாக்கம் காலனியை சேர்ந்தவர் கற்பகம். இவரது கணவர் பண்டாரி கடந்த 2010-ல் உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அரசு சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை கேட்டு குமாரராஜபேட்டை கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவலுவிடம் கற்பகம் மனு அளித்தார்.
இதனையடுத்து மனு மீது நடவடிக்கை எடுக்க லஞ்சமாக ஆயிரத்து 100 ரூபாய் கொடுக்க வேண்டும் என விஜயராகவலு கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கற்பகம் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் தந்த புகாரில் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக விஜயராகவுலு கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் விசாரணை மேற்கொண்டு வந்த திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றம் கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவலுக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
