சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
2021ம் ஆண்டு சென்னை கீழ்பாக்கத்தில் வசிக்கும் 7 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேற்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 48 வயது எதிரி மற்றும் 2 பெண்களை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
இவ்வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜூன் மாதம் 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி வழக்கில் எதிரிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மேற்படி 48 வயது குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.85,000/- அபராதமும், உடந்தையாக இருந்த 30 வயது பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், 28 வயது பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த W-4 கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.
